day, 00 month 0000

மொராக்கோவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்த பிரான்ஸ்

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி, மொராக்கோவை எதிர்கொண்டது. 

அல்பேத் ஸ்டேடியத்தில் ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் தியோ ஹெர்னாண்டஸ் தமது அணிக்கான முதல் கோலை அடித்தார். 

பதில் கோல் அடிக்க மொராக்கோ வீரர்கள் தீவிரமாக முயன்றனர். எனினும் அவர்களது முயற்சிகள் வெற்றி பெறவில்லை. முதல் பாதி ஆட்ட நிறைவில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. 

இரண்டாவது பாதி ஆட்டத்தின் 79 வது நிமிடத்தில் மற்றொரு பிரான்ஸ் வீரர் கோலோ முவானி தனது அணிக்கான 2வது கோலை அடித்தார். 

இதனால் பிரான்ஸ் வெற்றி உறுதியானது. கூடுதல் ஆட்ட நேர முடிவு வரை கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. 

இதையடுத்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் உலக கோப்பை தொடரில் 4வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. 

இந்த உலகக் கோப்பையில் கணிக்க முடியாத ஒரு அணியாக கருதப்பட்ட மொராக்கோ, அரை இறுதியை எட்டிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற சாதனையை படைத்தது. 

எனினும் இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் அந்த அணி வெளியேறியது அந்நாட்டு ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில் அரையிறுதி போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்