day, 00 month 0000

வடக்கை இரையாக்கும் ‘போதை’ : இளைஞனின் சாட்சியம்

ஒருவர் எப்படி போதைக்கு அடிமை ஆகின்றார்?
ஈயத்தாளை நுகர்ந்தாலே போதும். அப்படியே வானத்தில் மிதப்பது போல் இருக்கும், தமக்கு என்ன நடக்குது என்பதே தெரியாது. இழுப்பவர் கைகளுக்கெல்லாம் அவரவர் இஷ்டப்படி தவழ்ந்து வர முடியும். ( உங்க எங்க வீட்டு பெண்கள் நிலையை, இதன் விளைவுகளை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் )

போதைப்பாவனை என்றதும் பியரையும், வைனையும் ,விஸ்கி, பிரண்டியை ஒப்பிட்டு அதையும் இதையும் இணைத்து வரும் கருத்துக்கள் பிரச்சனையின் தீவிரத்தை உணராத நிலையை தான் வெளிப்படுத்துகின்றது.

இலங்கையின் வடக்கு மாகாணம்
‘போதைப்பொருள்’ ஆக்கிரமித்துள்ளது. இதனால் அடுத்த சந்ததியினரை இழக்கும் நிலையில் உள்ளது.
வீரகேசரியில் கடந்த 19.10.2022 வந்திருக்கும் கட்டுரையில் சமுக ஆர்வலர்களின் கண்களுக்கு இவை மறைந்து கிடக்கின்றது என சுட்டிக்காட்ட படுகின்றது.

ஆனால் சமுக ஆர்வலர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை கடந்து இவ்விடயங்களை கருத்தில் கொள்ள பொதுமக்களின் ஆதரவுகள் அவசியம்.
யாருக்கோ, யாரோ தானே என கடந்து சென்றால் நாளை நம் வீட்டு வாசலிலும் இதே பிரச்சனை வந்து நிற்கும் என புரியனும்.

வடக்கை இரையாக்கும் ‘போதைப்பொருள்’ : 23 வயது இளைஞனின் சாட்சியம் – நேரடி ரிப்போர்ட் வீரகேசரியில் வந்த பதிவினை பகிர்கின்றேன்.

*

உள்நாட்டு போரின்போது இழந்தவை ஏராளம். ஆனால், அதனை விட பன்மடங்கு இழப்புகளை போரற்ற இன்றைய சூழலில் வட மாகாணம் இழந்து வருகிறது.

சமூக ஆர்வலர்களின் கண்களுக்கு இவை மறைந்து கிடக்கின்றமை கவலையளிக்கின்றது.

பிள்ளைகளை போதைப்பொருளில் இருந்து பாதுகாக்க முடியாமல், எத்தனையோ தாய்மார்கள் கண்ணீர் விடுகின்றனர். மறுபுறம் போதைக்கு அடிமையான தனது மகனை பொலிஸாரிடம் ஒப்படைக்கும் நிலைமை கூட இங்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் இளைய சமூகத்தினரின் எதிர்காலம் பேரழிவை நோக்கிச் செல்கிறது என்பதையே பிரதிபலிக்கின்றன.

ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான 23 வயது இளைஞனை யாழ். சீர்திருத்த மையமொன்றில் சந்தித்தேன். கூடாத நட்பு, ஆபத்தை அறியாத ஆசைகளினால் போதைக்கு அடிமையாகி தொலைந்துபோன நாட்கள் குறித்து சில விடயங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டான்.

எனது தாய் ஒரு ஆசிரியை. தந்தை அரச உத்தியோகத்தராக உள்ளார். உயர்தரத்தில் கணித பிரிவில் பரீட்சை எழுதி சித்தியடைந்தேன். ஆனால், பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்பிருக்கவில்லை.

எனவே, தனியார் உயர்கல்வி நிலையமொன்றில் பட்டப்படிப்பினை தொடர்ந்தேன். எனக்கு இரு சகோதரிகள் உள்ளனர். அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்த என் வாழ்க்கை கொவிட் பெரும் தொற்றோடு மாறிப்போனது.

கொவிட் தொற்று முடக்க நாட்கள் அவை. பழைய நண்பர்களுடன் எதிர்பாராத விதமாக நெருங்கிய தொடர்புகள் கிடைத்தது.

அவர்கள் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமைப்பட்டவர்களாக இருந்துள்ளனர். அதனை நான் அறிந்திருக்கவில்லை. அவர்களும் ஹெரோயின் பயன்படுத்துகின்றமையை என்னுடன் பகிர்ந்துகொள்ளவும் இல்லை.

ஈயத்தாளை மூக்குக்கு அருகில் வைத்து எனது நண்பர்கள் ஏதோ செய்வதை எதர்ச்சியாக கண்டேன். அதுகுறித்து வினாவினேன்.

முதலில் ஒன்றுமில்லை என்றவர்கள், பின்னர் ஹெரோயின் என்பதை கூறினர்.

பியர் மற்றும் மதுபானத்தை குடிக்கும்போது அவற்றின் மனம் வீட்டாருக்கு காட்டிக்கொடுப்பதாகவும், அதனாலேயே ஹெரோயின் போதைப்பொருளை பயன்படுத்துவதாகவும் கூறினர்.

அதற்கு பின்னர் பல தடவைகள் அவர்கள் ஹெரோயின் அடிப்பதை கண்டேன். காலப்போக்கில் என்னை அறியாமலேயே அந்த பழக்கத்துக்கு ஈரக்கப்பட்டு அடிமையாகிவிட்டேன்.

இந்த போதைக்கு அடிமைப்பட்டால், இந்தளவு ஆபத்து வரும் என்று நான் அறிந்திருக்கவில்லை. நாளொன்றுக்கு 3 ஆயிரத்துக்கு ஹெரோயின் வாங்கி அடிப்பேன்.

கல்வி நடவடிக்கைக்காக எனது வங்கி கணக்குக்கு வீட்டிலிருந்து பணம் அனுப்புவார்கள். அதனையே ஹெரோயின் வாங்க பயன்படுத்தினேன். ஹெரோயினை பயன்படுத்திய முதல் நாளில் தலைசுற்றல், வாந்தி என அவதிப்பட்டேன். ஆனால், அன்று பசி, உடல் சோர்வு இருக்கவில்லை.

இறுதியில் ஈயத்தாளை கண்டாலே ஹெரோயின் அடிக்க வேண்டும் என்ற வெறித்தனம் ஏற்பட்டுவிட்டது. தொடர்ந்து ஹெரோயின் பழக்கத்துக்கு அடிமைப்பட்டு, இறுதியில் அது இல்லாமல் இருக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டேன்.

ஹெரோயின் அடிக்காதபோது, எழுந்து நடக்க முடியாமல் போனது. ஹெரோயின் கிடைக்காவிட்டால், உடம்பெல்லாம் குத்தும். நாடியெல்லாம் வலிக்கும்.

எத்தனையோ வலிகள் உடம்புக்குள் ஏற்படும். வலிகளை தாங்க முடியாமல் வெறி பிடித்தவன் போன்று செயற்பட்டுள்ளேன்.

எங்காவது பணத்தை பெற்று ஹெரோயினை அடித்துவிட்டால் போதும். சாதாரணமாக செயல்பட முடியும்.

ஆரம்பத்தில் சிற்றின்பத்துக்காக பயன்படுத்தினேன். இறுதியில் வலிகளில் இருந்து மீள கட்டாயமாக பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

முதல் 5 தொடக்கம் 10 நாட்கள் வரை மாத்திரமே இன்பத்துக்காக பயன்படுத்த முடியும். பின்னர் அடிமைப்படுத்திவிடும். ஹெரோயின் போதைக்கு அடிமையாகி சுமார் இரண்டு வருடங்கள் வரை வாழ்க்கையை தொலைத்துவிட்டேன்.

ஹெரோயின் போதைப்பொருளை பொறுத்த வரையில் விற்பனை செய்ய வேண்டும் என்று இல்லை. அதனை பழக்கப்படுத்திவிட்டால் போதும். விற்பவர்கள் எங்கிருந்தாலும், தேடிப் போய் வாங்குவார்கள். காடுகளில் இருந்தாலும் கூட, சென்று ஹெரோயினை பெற்றுக்கொள்வோம். ஹெரோயினுக்கு அடிமைப்பட்டதை எனது தாய் அறிந்துவிட்டார். இன்று சட்ட நடவடிக்கைகள் பிரகாரம் சீர்திருத்த மையத்தில் உள்ளேன்.

ஹெரோயின் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று இந்த மையத்துக்கு வந்தேன். ஆரம்பத்தில் தப்பித்துச் செல்வதற்கு கூட முயற்சித்தேன். மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

இன்று என்னை கட்டுப்படுத்தும் அளவுக்கு சுகமடைந்துவிட்டேன். உள ரீதியான மாற்றத்தின் ஊடாகவே ஹெரோயின் அடிமைத்தனத்திலிருந்து முழுமையாக குணமடைய முடியும் என்பதை உணர்ந்துவிட்டேன் என்று அமைதியாக கூறி முடித்தார்.

இவ்வாறு எத்தனையோ இளம் வயதினர் வடக்கில் மாத்திரமல்ல, நாட்டின் பல பகுதிகளிலும் போதைப்பொருளுக்கு அடிமையாகி, வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்