day, 00 month 0000

போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு யாழில் புனர்வாழ்வு நிலையம்

எங்களுடைய பிரதேசம் இந்த போதைவஸ்தினால் மிகப்பெரிய நெருக்கடியையும்,அச்சுறுத்தலையும் சந்தித்துக்கொண்டிருக்கிறது.அண்மையில் பத்திரிகைகளில் வருகின்ற செய்திகள் அனைவரையும் கவலைக்குள்ளாக்குகின்ற செய்திகளாகவே நாங்கள் படித்துக்கொண்டிருக்கிறோம் என யாழ் மாநகர சபையின் முதல்வர் வி.மணிண்ணன் தெரிவித்தார்.

பப்ரல்  அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை நெறியின் யாழ் மாவட்ட பெண்கள் குழு நடாத்தும் போதையினால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தி நற்பிஜைகளாக உருவாக்குவோம்  எனும் தொனிப் பொருளிலான போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வு திருநெல்வேலி முத்து தம்பி இந்து மகா வித்தியாலயத்தில்  இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒவ்வொரு பெற்றோர்களும்,தங்களது பிள்ளைகள் எவ்வாறு பாதிக்கப்பட போகின்றார்கள் என்ற அச்சத்தில் தங்களின் வாழ் நாளினை கழிக்கின்ற ஒரு அவல நிலைமை தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சமூகத்தில் பெரியவர்களால் முன்வைக்கப்படுகிறது.இது திட்டமிட்ட வகையில் நடாத்தப்படுகின்றது என்று இந்த போதைப்பொருள் வர்த்தகத்தின் இலக்காக பாதிக்கப்படுகின்ற தரப்பாக இருப்பது யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற பாடசாலை மாணவர்களாகவே இருக்கின்றார்கள்.

பாடசாலை மாணவ ,மாணவிகளை இலக்கு வைத்து இவ்வாறான போதைப்பொருள் விநியோகம் அண்மைக்காலங்களில் அதிகரிக்கப்பட்டு வருகின்றது.அறிந்தும் அறியாமலும்,அதன் விளைவுகளை தெரியாமலும் எமது இளைஞர்,யுவதிகள் இந்த போதைப்பொருளை அடிமையாகிக்கொண்டு இருக்கின்ற அவலம் இந்த மண்ணில் நிகழ்வேறிக்கொண்டிருக்கிறது.


இதனை தடுத்து நிறுத்த வேண்டிய கடப்பாடு ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.இதில் விஷேசமாக அரசியல் தலைவர்கள்,சமூகத்தில் உள்ள பொறுப்புவாய்ந்தவர்கள்,பாடசாலை அதிபர்கள் என பல்வேறு தரப்பினருடைய கடமையாக இருக்கிறது.

எதிர்காலத்தில் இந்த போதைப்பொருள் பாவனைக்குள் உள்ளாகாதவாறு மாணவர்களை எவ்வாறு பாதுகாப்பது தொடர்பில் நாங்கள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 யாழ்  மாநகர முதல்வர் என்ற ரீதியில்  எதிர்காலத்தில் எவ்வாறான செயற்பாட்டினை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பில் அனைத்து தரப்பினருடனும்  போதைப் பொருளுக்கு எதிரான செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து விசேட கூட்டம் ஒன்றிணைத்து விரைவில் அந்த செயற்பாட்டினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளேன்  பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி சமூகத்தினர் மற்றும் பொலிசார் ஆகிய அனைத்து தரப்பினரை ஒன்றிணைத்து எவ்வாறு இந்த போதைப் பொருட்களில் இருந்து எமது மாணவ சமூகத்தை காப்பாற்ற முடியும் என்ற விடயத்தினை அறிந்து அதனை செயல்படுத்துவதற்குரிய நடவடிக்கை விரைவில் முன்னெடுக்க உள்ளோம்.

அத்தோடு போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர் வாழ்வு அளிக்கக் கூடிய விசேட நிலையம் ஒன்றினை  யாழ் நகருக்கு அண்மையில் அமைப்பதற்கு யோசித்து வருகின்றோம் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை சிறைச்சாலைக்கு அனுப்புவதன் மூலம் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள் ஆகவே போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை புனர் வாழ்வுக்கு அனுப்புவதன் மூலம் அவர்களை சமூகத்தோடு ஒருங்கிணைக்க முடியும்.

எனவே வடக்கில் யாழ் நகருக்கு அண்மையில் ஒரு இடத்தில் புனர்வாழ்வு நிலையம் ஒன்றினை அமைப்பதற்கும் நாங்கள் தீர்மானித்திருக்கிறோம் அதற்குரிய முயற்சியை  எடுத்து வருகின்றேன் அனைவரின் ஒத்துழைப்புடன் அந்த விடயம் விரைவில் கைகூடும் எனவும் தெரிவித்தார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்