day, 00 month 0000

இலங்கையின் 50 படையதிகாரிகளுக்கு எதிராக குற்றங்கள் சுமத்தல் என்கிறார் விமல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இணங்க, இலங்கையின் சுமார் 50 படையதிகாரிகளுக்கு எதிரான குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக சில நாடுகளில் குறித்த படையதிகாரிகளுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்யமுடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.

எனவே இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இல்லையேல், நாட்டை பாதுகாத்த படையினருக்கு இது துரோகமாக இருக்கும் என்று விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

இதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று நாடாளுமன்ற சபையில் குறிப்பிட்டார்.

இதுவரை காலமும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், தற்போது அமைச்சர் அலி சப்ரி, உண்மையை கண்டறியும் பொறிமுறை மேற்கொள்ளப்படுவதாக எவ்வாறு கூறமுடியும் என்று பீரிஸ் கேள்வி எழுப்பினார்.

இதனை எவ்வாறு ஜெனீவா பேரவை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளும் என்று கேட்ட அவர், இது நம்பிக்கை தொடர்பான பிரச்சினை என்று குறிப்பிட்டார்.

எனினும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன, இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததுடன், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் இருந்த நாடுகள், தமது உள்நாட்டு தீர்மானங்களுக்கு இணங்க, செயற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

எனினும் கோட்டாபய ராஜபக்ச 11 ஆயிரம் விடுதலைப்புலிகளை விடுவித்தமை, மற்றும் ரணில் விக்கிரமசிங்க தற்போது மேற்கொண்டு வரும் மனித உரிமை செயற்பாடுகளை தினேஸ் குணவர்த்தன சுட்டிக்காட்டினார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்