ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் நேற்றிரவு நடைபெற்ற இலங்கையுடனான குழு பி போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது.
தொடரின் முதற் போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தானின் அணித்தலைவர் மொஹமட் நபி, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
இலங்கை சார்பாக வேகப்பந்துவீச்சாளர்கள் மதீஷ பத்திரண, டில்ஷான் மதுஷங்க ஆகியோர் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தனர்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை, முதலாவது ஓவரிலேயே பஸல்ஹக் பரூக்கியிடம் குசல் மென்டிஸ், சரித் அஸலங்கவை இழந்தது. அடுத்த ஓவரில் சர்ச்சைக்குரிய விதத்தில் நவீன்-உல்-ஹக்கிடம் பதும் நிஸங்க வீழ்ந்தார். நிஸங்கவுக்கு ஆடுகள நடுவரால் ஆட்டமிழப்பு வழங்கப்பட்டு மீள்பரிசீலனை செய்யப்பட்டபோது துடுப்பை பந்தைக் கடந்து செல்லும்போது அதிர்வேதும் இல்லாதபோதும் அது ஆட்டமிழப்பாகவே வழங்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து பானுக ராஜபக்ஷவும், தனுஷ்க குணதிலகவும் ஓட்டங்களைப் பெற்ற நிலையில் முஜீப் உர் ரஹ்மானிடம் குணதிலக வீழ்ந்தார். குறிப்பிட்ட நேரத்தில் அடுத்து வந்த வனிடு ஹஸரங்கவும் ரஹ்மானிடம் வீழ்ந்தார். பின்னர் அணித்தலைவர் தசுன் ஷானக நபியிடம் வீழ்ந்ததோடு, 38 (29) ஓட்டங்களைப் பெற்ற ராஜபக்ஷ, மகேஷ் தீக்ஷன ஆகியோர் அடுத்தடுத்து ரண் அவுட்டாகியிருந்தனர்.
இறுதியில் நபியிடம் மதீஷ பத்திரணவும் வீழ்ந்ததோடு, இறுதி வரையில் போராடிய சாமிக கருணாரத்ன 31 (38) ஓட்டங்களோடு பரூக்கிடயிடம் விழ 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களையே இலங்கை பெற்றது.
பதிலுக்கு 106 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், ரஹ்மனுல்லாஹ் குர்பாஸின் 40 (18), ஹஸரத்துல்லாஹ் ஸஸாயின் ஆட்டமிழக்காத 37 (28) ஓட்டங்களோடு 10.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக பரூக்கி தெரிவானார்.