cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு : இம்ரான் இல்லாத தேர்தலை சந்திக்க ஷெரீப் முயற்சியென குற்றச்சாட்டு

பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைய மூன்று நாட்கள் எஞ்சியிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்டுள்ளது.

கடுமையான நிதி நெருக்கடி, ஸ்திரமற்ற அரசியல் சூழல் என தவித்துவரும் பாகிஸ்தானில் தேர்தலொன்றை நடத்துமாறு பொது மக்களும் எதிர்க்கட்சிகளும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தப் பின்புலத்திலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

இதற்கான உத்தரவை ஜனாதிபதி ஆரிப் ஆல்வி பிறப்பித்தார்.

பாகிஸ்தானில் கடந்த 2018-இல் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு கூட்டணி ஆட்சி அமைந்தது.

இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது.

இம்ரான் கான் 4 ஆண்டுகள் பிரதமர் பதவியில் இருந்துவந்த நிலையில் அந்த ஆட்சிக்கு ஆதரவு அளித்துவந்த முக்கியக் கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டது. அத்துடன், இம்ரான் கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதால் அவர் பதவி இழந்தார்.

இதையடுத்து எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன. பாகிஸ்தான் பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( பிஎம்எல்-என்) கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், பதவிக் காலம் முடிவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக நேற்றிரவு பாராளுமன்ற கலைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. பாராளுமன்றம் பதவிக்காலம் முடிந்து 60 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும்.

ஆனால் நாடாளுமன்றம் பதவிக்காலம் முடியும் முன்னரே அதனைக் கலைத்தால் 90 நாட்களில் பாராளுமன்றத் தேர்தலை நடத்திக் கொள்ளலாம். கூடுதலாக 30 நாட்கள் கிடைக்கும் என்பதாலேயே பிரதமர் பாராளுமன்றத்தை முன் கூட்டியே கலைக்க பரிந்துரைத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ் சாட்டி வருகின்றன.

அண்மையில் தான் அரசு திறைசேரி பரிசுப் பொருட்கள் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்றத் தீர்ப்பின்படி, இம் ரான் கான் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.

இனி பாராளுமன்றத் தேர்தல் நடத்தினால் இம்ரான் கான் இல்லாத களத்தை சந்திக்கலாம் என்பதாலேயே பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டதாக இம்ரான் கான் கட்சியினர் குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்