அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் அமெரிக்க ஜனாதிகதி டிரம்ப் தீவிரமாக உள்ளார். சமீபத்தில் டிரம்ப் கூறும் போது, ‘அமெரிக்கா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது’ என்று தெரிவித்தார்.
மேலும் தடுப்பூசி வினியோகத்துக்கு நவம்பர் 1ஆம் திகதி முதல் தயாராக இருக்கும்படி மாகாணங்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதற்கிடையே 3ஆம் கட்ட சோதனைக்கு முன்பே தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாடு அடிப்படையில் அங்கீகாரம் அளிக்க வாய்ப்பு உள்ளது என்றும், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் தடுப்பூசி விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை, நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலாஹாரிஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த நிபுணர்களின் கருத்தை அடக்குவதில் டிரம்ப் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதுபோன்று வரும் காலத்தில் தடுப்பூசி விவகாரத்திலும் நிகழக்கூடும்.
கொரோனா தடுப்பூசி நவம்பர் மாதத்துக்கு முன்பாக கிடைத்தால் அந்த தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு விவகாரத்தில் டிரம்பின் வார்த்தையை நான் நம்ப மாட்டேன். நம்பகமான ஒருவர் அதற்காக உறுதி அளித்தால் மட்டுமே நம்புவேன். ஆனால் டிரம்பை நம்ப மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.