தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடுவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கியவர் எம்.ஏ.சுமந்திரன் என்ற விடயம் பகிரங்கமான விடயம் என ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்றையதினம் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
அறிமுக நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தலைமையில் இடம்பெற்ற குறித்த அறிமுக கூட்டத்தில் ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய அங்கத்துவ கட்சிகளான ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் தேசியக் கட்சி சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சி சார்பாக வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த அறிமுகக் கூட்டத்தில் குறித்த 5 கட்சிகளையும் உள்ளடக்கி மன்னார் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.