// print_r($new['title']); ?>
day, 00 month 0000

வலி வடக்கு காணி அபகரிப்புக்கு எதிரான போராட்டம் நாளை

வலி வடக்கு காணி அபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கான அழைப்பை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்றைய தினம் விடுவித்த நிலையில், “எமது நிலம் எமது உரிமை எமது நிலம் எமக்கு வேண்டும்” என்ற தொனிப்பொருளில் நாளை புதன்கிழமை காலை 8 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக முன்றிலில் இடம்பெறவுள்ளது.

காணி அபகரிப்பு மூலம் எங்கள் தாயகத்தை கூறு போடுகின்ற நிகழ்வுக்கு இடமளிக்க முடியாது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வலி வடக்கிலே பொதுமக்களுடைய காணிகளை அபகரித்து அரச இயந்திரங்கள் தங்களுடைய செயல்பாடுகளுக்கு பயன்படுத்துகிற செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

“அண்மையில் யாழ்ப்பாண மாணவர் ஒன்றியம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களையும் ஏனைய பல்கலைக்கழகங்களையும் வளாகங்கள் மற்றும் பீடங்களில் உள்ள தமிழ் மாணவர்களையும் ஒன்றிணைத்து வடக்கு கிழக்கு மாணவர் ஒன்றியத்தை அங்குரார்ப்பணம் செய்திருந்தார்கள்.

அந்த விடயத்திற்கு சிவில் அமைப்புகள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். எங்களுடைய இளைய சமுதாய இளைஞர்களுடைய தமிழ் தேசிய போராட்டத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.

அந்த முயற்சியில் முதல் அடிக்கல் ஆக இதை எடுத்திருப்பது வரவேற்கத்தக்க விடயம். மற்றும் அந்த அங்குரார்ப்பண நிகழ்வைத் தொடர்ந்து நாளைய தினம் இப்போராட்டத்திற்கு மாணவர் ஒன்றியம் அழைப்பை விடுத்திருப்பதும் இன்னும் வரவேற்கத்தக்க விடயம்.

அதுமட்டுமல்லாமல் கிழக்கிலிருந்தும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றார்கள். இது எமது தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளிக்காட்டக் கூடியதாக உள்ளது.

மேலும் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டுள்ள அனைத்து சிவில் அமைப்புகளும் இந்த போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அந்த வகையிலே யாழ் மாவட்டத்தில் 3427 ஏக்கர் நிலம் சிறிலங்கா அரசாங்கம், இராணுவம் மற்றும் ஏனைய படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குறிப்பாக வலி வடக்கில் 2467 ஏக்கர் நிலம் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

இவை அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும். மேலும் காணி அமைச்சினுடைய மேலதிக செயலாளர் தெல்லிப்பளை பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலே 1674 ஏக்கர் நிலத்தை சுவீகரிப்பதற்கு உத்தரவு இட்டு இருக்கின்றார்.

இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்கள் வளங்கள் சுரண்டப்படுகின்றன. சிறிலங்கா அரசினுடைய சிங்கள பௌத்த பேரினவாத அரசு எங்களுடைய நிலத்தை பயன்படுத்தி தோட்டம் செய்வதாக இருக்கட்டும் எங்களுடைய கடல் வளத்தை சுரண்டி அவர்களின் பொருளாதாரத்தை வளர்க்கின்றனர்.

இது எமது நிலம் இதுவே எமது உரிமை என்று நாளைய தினம் போராட்டத்தை முன்னெடுக்கின்றோம். மேலும் தெல்லிபளை சந்தையில் நடக்கின்ற போராட்டத்திற்கு மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

காலநிலைக்கு அஞ்சமாட்டோம். இதன் மூலம் தமிழ் தேசியத்தின் மேல் உள்ள பற்றை காட்டவே வேண்டும். இதில் எந்த கட்சி தலையிலும் இல்லாமல் தமிழ் தேசியத்திற்காக அனைவரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்” என்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் சார்பில் யாழ் பல்கலைக்கழக மாணவருக்கு ஆதரவு வழங்கி இருக்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்