// print_r($new['title']); ?>
மரியாதைக் குறைவாக நடந்து விடக்கூடாது என்பதற்காக ஒபிஎஸ்க்கு கட்சியின் இணை பொதுச்செயலாளர் பதவி வழங்குவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகத் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட அதிமுக செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய தங்கமணி, “தற்போது அதிமுகவில் இருக்கின்ற நிலைமையைப் பார்த்து கட்சி இருக்குமா ? இரட்டை இலை இருக்குமா ? எனத் தொண்டர்கள் குழம்பி உள்ளனர். அதிமுகவில் என்ன பிரச்சினை நடந்தது எனத் தான் தெளிவாகக் கூறுகின்றேன்.
ஏன் என்றால் நான் பல்வேறு பிரச்சினைகளிலும் தான் இருந்தேன், அதிமுக ஆட்சி இருக்கின்ற போது ஓ பி எஸ் அவர்கள் தர்ம யுத்தம் நடத்தினார், பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சிக்கு எதிராக எதிர்த்து வாக்களித்தவரைத் துணை முதலமைச்சர் ஆக்கப்பட்டார். அந்த நிலையில் ஓபிஎஸ் 12 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருந்தனர்.
அப்படியிருந்தும் அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி ஓ பி எஸ்சை அரவனைத்தார். சட்ட மன்ற தேர்தல் நேரத்தில் தனக்கு வேண்டியவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டும் எனப் பிரச்சினை செய்தார். முதல்வர் வேட்பாளர் தேர்விலும் 10 நாட்கள் பிரச்சினை நீடித்தது.
முதல்வராகச் சிறப்பாகப் பணி புரிந்த நிலையில் வேண்டா வெறுப்பாகத் தான் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ் ஏற்றுக் கொண்டார். வெற்றி வாய்ப்பை இழந்த பிறகும் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதிலும் ஓபிஎஸ் பிரச்சனை செய்தார். நாடாளுமன்ற மேலாவைத் தேர்தலில் எப்போதுமே அதிமுக தான் வேட்பாளர்களை அறிவிக்கும்.
இந்த முறை திமுக வெளியிட்டு விட்டது. அதிமுக மேலாவை வேட்பாளர்கள் தேர்வில் ஓபிஎஸ் அவர்கள் காலம் தாமதம் செய்ததால் தான் இறுதி நேரத்தில் தான் வெளியிடப்பட்டன. அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தான் ஒற்றத்தலைமை வேண்டும், எடப்பாடி பழனிச்சாமி வரவேண்டும் என அனைவரும் தெரிவித்தனர். ஓபிஎஸ் அவர்கள் ஏற்க மறுத்து விட்டார்.
இருந்தபோதிலும் மரியாதைக் குறைவாக நடந்து விடக்கூடாது என்பதற்காக ஓபிஎஸ் அவர்களுக்குக் கட்சியின் இணை பொதுச்செயலாளர் பதவி வழங்குவதாக எடப்பாடி கூறினார். ஓ பி எஸ் மகனுக்கு மந்திரி பதவி கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார், அதையும் வழங்குவதாக எடப்பாடி தெரிவித்தார்” என தங்கமணி பேசினார்.