// print_r($new['title']); ?>
day, 00 month 0000

பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வந்த கவர்னர் பதவிதான் காலாவதியாக போகிறது

தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் டூவிபுரம் 5-ம் தெருவில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். 

மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

தினம்தோறும் மக்களுக்கான திட்டங்களை எப்படி எல்லாம் செயல்படுத்தலாம் என்று சிந்தித்து செயல்படும் தி.மு.க. ஆட்சியை பார்த்து திராவிடம் காலாவதியாகி விட்டது என்று சனாதனம் பற்றி ஆளுநர் பேசுகிறார். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள 2,200 கோவில் சொத்துக்களை மீட்டு பாதுகாத்துள்ளார். இதை சனாதனம் செய்யவில்லை. திராவிடம் தான் செய்தது.

திராவிட மாடல் ஆட்சியில் படித்தவர்கள் தான் பலர் வெளிநாட்டில் பணியாற்றுகிறார்கள். இந்தியாவை ஆளும் நிலைக்கு திராவிட மாடல் வந்து விட்டது. ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் ரூ. 77 லட்சத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி துறைமுகம் மேம்படுத்துதல், தூர்வாருதல் பணிகள் நடைபெறுகின்றன. கோரம்பள்ளம் குளம் ரூ. 12 கோடியில் தூர்வாருதல், உப்பளத் தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஆட்சிக்கு வந்ததும் மழை காலங்களில் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தது மட்டுமின்றி அதற்கு தனிநல வாரியமும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் 8,400 பேர் பயனடைவார்கள்.

திராவிடம் எல்லோருக்கும் ஒன்று தான். ஒரு தோட்டத்தில் உள்ள எல்லா பழமும் எங்களுக்கு தான் என்று சொல்வது சனாதனம். இது எல்லோருக்கும் என்று சொல்வது திராவிடம். யாரையும் தூக்கி பிடிக்க வேண்டாம். நீயும், நானும் ஒன்று என்று நினைக்க வேண்டும். எல்லா தப்பையும் நீங்கள் செய்துவிட்டு எங்களை காலாவதியாகி விட்டது என்று கூறுகிறீர்கள். மக்கள் உங்களை விரட்டும் காலம் வந்து கொண்டு இருக்கிறது. அம்பேத்கார் சட்டத்தை இயற்றும் போது என்னையும் அமைச்சரையும் மக்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்ததை போல் ஆளுநரையும் அப்படி தேர்வு செய்யலாமா என்று கேட்டபோது அந்த பதவிக்கு யாரும் வர மாட்டார்கள். இது ஒரு அலங்கார பதவிதான் என்று கூறினார்கள்.

அந்த அலங்காரம் தேவையில்லை என்றால் அதை எடுத்துவிடலாம். எங்கள் பதவி காலாவதியாகவில்லை. பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வந்த உங்கள் பதவிதான் காலாவதியாக போகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சாதனைகள் தொடரும். நாட்டின் மாற்றம் தமிழ்நாட்டில் இருந்து தொடங்கும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், கலைஞர், ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு நுழையவில்லை. தான் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நீட் வந்தது. மாநில உரிமைகளை எல்லாம் விட்டுக் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. மோடிக்கு ஜால்ரா போடுபவர்கள் நமக்கு தேவையில்லை. 36 நல வாரியங்கள் மூலம் 6 லட்சத்து 75 ஆயிரம் பேர் பயனடைகின்றனர். இந்த தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளன. அது மீண்டும் தொடர கனிமொழி எம்.பி மீண்டும் தேவை என்று பேசினார். தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

 
 
 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்