சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் ஆரம்பமாகி ஆஸ்பத்திரி வீதியின் ஊடாக சென்று மாவட்ட செயலகத்தை சென்றடையவுள்ளது.
குறித்த போராட்டத்தில் “கோட்டா அரசே நீ கொண்டு போனவர்கள் எங்கே? உங்கள் இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள், கொலைகாரன் நீதி வழங்க முடியாது, சர்வதேசமே! எம் கண்முன்னே இழுத்துச் செல்லப்பட்ட எமது உறவுகளைத்தேடி பத்தாண்டுகளாக கண்ணீரோடு நாம் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சர்வதேச விசாரணை வேண்டும், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே? என கோசங்கள் எழுப்பியவாறும் பேரணியில் கலந்துகொண்டிருந்தவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
காணாமலாக்கப்பட்டோரின் குறித்த போராட்டத்திற்கு ஆரவாக பொதுமக்கள், தமிழ் அரசியல் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் பேரணியில் கந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகின் பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டோர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக உலகளாவிய ரீதியில் சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையைப் பொறுத்தவரையில் இறுதி யுத்தத்திற்கு முன்னரும் யுத்தத்தின்போதும் யுத்தத்திற்கு பின்னரும் பலர் கைது செய்யப்பட்டும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டும் காணமாலாக்கப்பட்டுள்ளனர் என தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, அவர்களை கண்டுப்பிடித்து தருமாறு வலியுறுத்தி தமிழர் தாயகமெங்கம் கடந்த பல வருடங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்களாகியும் காணமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து தமது உறவுகள் தொடர்பாக நீதி வழங்கமாறு சர்வதேசத்திடம் வலியுறுத்தி இன்று வடக்கு, கிழக்கில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.